ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பக்தர்கள் ஆர்வத்துடன் வந்த காட்சி.

ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

Published On 2020-09-03 05:57 GMT   |   Update On 2020-09-03 05:57 GMT
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் 2-வது நாள் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. அம்மா மண்டபத்தில் தர்ப்பண நிகழ்ச்சி தொடங்கியது.
தமிழகத்தில் ஊரடங்கில் பெரிய அளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அவை நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, பெரிய அளவிலான இந்து வழிப்பாட்டு தலங்கள், பள்ளிவாசல், தர்கா மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் தரிசன வழிப்பாட்டுக்கும், தொழுகைக்கும் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் நடை அதிகாலை முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. முதல் நாளான நேற்று முன்தினம் பக்தர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.

2-வது நாளான நேற்று கோவிலுக்குள் பக்தர்கள் வருகை அதிகரித்தது. அதிகாலை முதலே ரெங்கா..ரெங்கா கோபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பு கட்டைகள் வழியாக செல்ல காத்திருந்தனர். அவர்களுக்கு மணி வாரியாக தரிசன டோக்கன் இலவசமாக வழங்கப்பட்டது.

நுழைவு வாயிலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பக்தர்கள் கைகளை சுத்தம் செய்வதற்கு சானிடைசர் கொடுக்கப்பட்டது. மேலும் பக்தர்களின் உடல் வெப்பநிலை ‘தெர்மல் ஸ்கேனர்’ கருவி மூலம் கணக்கிடப்பட்டது.

ரெங்கநாதரை வழிபட செல்லும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை 300 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மணி வாரியாக தரிசன நேர அட்டவணை வருமாறு:-

காலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை, காலை 9 மணி முதல் 10 மணிவரை, 10 மணி முதல் 11 மணிவரை, 11 மணி முதல் பகல் 12 மணிவரை. 1 மணி நேர இடைவெளிக்கு பின்னர் பிற்பகல் 1 மணி முதல் 2 மணிவரை, பிற்பகல் 2 மணி முதல் 3 மணிவரை, 3 மணி முதல் மாலை 4 மணி வரை. பின்னர் ஒன்றரை மணிநேர இடைவெளிக்கு பின் மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை, மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை என ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 300 டோக்கன் வழங்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் காவிரி ஆற்றின் கரையோரம் அம்மாமண்டபம் உள்ளது. இங்குதான் ஆடி 18-அன்று வந்து பூஜை செய்து வழிபட்டு திருமண மாலைகளை புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றில் விடுவது வழக்கம். மேலும் அமாவாசையன்று இறந்த முன்னோர்கள் ஆத்மா சாந்தியடையும் வகையில் உறவினர்கள் தர்ப்பணம் செய்வது, வேண்டுதல் நிறைவேற மொட்டை அடிப்பது எல்லாம் நடக்கும்.

ஆனால், ஊரடங்கு காரணமாக அம்மாமண்டபம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. புரோகிதர்கள் பலர் வருவாய் இழந்து தவித்தனர். இந்தநிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் அம்மாமண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் கார், இருசக்கர வாகனங்களில் குவிந்தனர். அதே வேளையில் அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. பலர் முக கவசங்கள் அணியாமலும் இருந்தனர். கொரோனா காலம் இன்னும் முடியவில்லை என்பதை மறந்து செயல்பட்டதுபோல அங்கு நிலைமை இருந்தது.
Tags:    

Similar News