செய்திகள்
திசையன்விளை அருகே லாரி மோதி வாலிபர் பலி
திசையன்விளை அருகே லாரி மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பர் காயம் அடைந்தார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சங்கரன் குடியிருப்பு நடுத்தெருவை சேர்ந்தவர் வைகுண்டராஜா. இவரது மகன் டெல் சிங் (வயது 26). இவரது நண்பர் பெரும்பனையை சேர்ந்த தாமோதரன் மகன் ரோகித் கிஷோர் (22).
இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சுவிஷேசபுரம் அருகே சென்று கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். அப்போது, அந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி டெல் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரோகித் கிஷோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து உடனடியாக திசையன்விளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டெல்சிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்மதபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த லாரி டிரைவரான முத்துக்குமார் (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திசையன்விளை அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.