செய்திகள்
பல ஆண்டுகளுக்கு பின்னர் தாயாருடன் உணவருந்திய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தனது 69-வது பிறந்தநாளான இன்று பல ஆண்டுகளுக்கு பின்னர் தனது தாயாருடன் அமர்ந்து உணவருந்தினார்.
அகமதாபாத்:
பிரதமர் மோடியின் 69-வது பிறந்தநாளை இன்று பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளன்று சொந்த மாநிலமான குஜராத் வரும் பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் மோடியை சந்திப்பார்.
தாயாரிடம் ஆசி பெற்ற பின்னர் இருவரும் இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள். இதையடுத்து, சிறிது நேரத்தில் தாயாரிடம் இருந்து விடைபெற்று வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து உடனடியாக புறப்பட்டு சென்று விடுவார்.
இந்நிலையில், தனது 69-வது பிறந்தநாளான இன்றும் பிரதமர் மோடி குஜராத் சென்றார். அங்கு தனது தாயார் ஹீராபென் வசிக்கும் சகோதரரின் வீட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அவரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர், நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது தாயாருடன் இணைந்து அவர் உணவு அருந்தினார்.