செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிரா: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே வெளிநடப்பு செய்த பாஜக

Published On 2019-11-30 09:51 GMT   |   Update On 2019-11-30 09:51 GMT
மகாராஷ்டிர சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பே, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர்.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி” என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சிக்கு வந்துள்ளன. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

உத்தவ் தாக்கரே சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை வரும் 3-ந்தேதிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு மூலம் நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். அதன்படி மகாராஷ்டிர மாநில சட்டசபையின் 2 நாள் சிறப்பு கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபித்தார்.

முன்னதாக, சட்டப்பேரவை விதிகளின்படி சிறப்புக்கூட்டம் கூட்டப்படவில்லை என பாஜக குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டது. எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகரை நியமித்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் கோரிக்கை விடுத்தார். இடைக்கால சபாநாயகர் நியமனமும் அரசியலமைப்புக்கு எதிரானது என்று அவர் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்கும்படி இடைக்கால சபாநாயகர் கேட்டுக்கொண்டார். ஆனால், தொடர்ந்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பட்னாவிஸ், சட்டசபை கூட்டத்தொடரை சஸ்பெண்ட் செய்வது தொடர்பாக ஆளுநரிடம் கடிதம் கொடுக்க உள்ளதாக கூறினார்.

Tags:    

Similar News