கூடலூர் அருகே தனியார் பஸ் மோதி விவசாயி பலி
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் கிழக்கு முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முனியாண்டி மகன் செந்தில்குமார் (வயது 39). விவசாயி. இவர் நேற்று வெளியூர் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
செல்வபுரம் விலக்கு பகுதியில் வந்த போது குமுளியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கூடலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவர் குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூடலூர் பகுதியில் ஏராளமான திராட்சை கடைகள் உள்ளன. இந்த சாலை வழியாக கேரள மாநிலத்துக்கு வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
அப்பாச்சி பண்ணை என்ற இடத்தில் போலீசார் பேரி கார்டுகள் அமைத்துள்ளனர். இதனால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு புகார் எழுந்துள்ளது.