செய்திகள்
கோப்புபடம்

விருத்தாசலம் அருகே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி

Published On 2021-09-24 12:39 GMT   |   Update On 2021-09-24 12:39 GMT
விருத்தாசலம் அருகே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி நடந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி.யிடம் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.
கடலூர்:

விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் பகுதியை சேர்ந்த இளையராஜா (வயது 39) என்பவர், நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவறை எழுத்தர் காலிபணியிடத்திற்கு நானும், அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு எனது மனைவி மேகலாவும் தனித்தனியாக விண்ணப்பித்தோம். இதேபோல் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் விண்ணப்பித்து விட்டு வெளியே வரும் போது, மும்முடிசோழகன் மற்றும் வடலூர் ஆர்.சி.காலனியை சேர்ந்த 2 பேர் என்னை தொடர்பு கொண்டு, எங்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் நேரடியாக வேலை வாங்கி கொடுக்க ஆட்கள் உள்ளது. அதனால் உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் அரசு வேலை வாங்கி தரவேண்டுமானால் ரூ.8 லட்சம் தரவேண்டும் என்றனர்.

இதை நம்பிய நான், பல்வேறு தவணைகளில் ரூ.8 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள், வேலை வாங்கி தராமல் மோசடி செய்து விட்டனர். மேலும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால், ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News