செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.

வானூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2021-10-21 04:39 GMT   |   Update On 2021-10-21 04:39 GMT
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த ஆரோவில் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 53). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி அமுதா (45). இவரும் அந்த பகுதியில் வேலைக்கு சென்று வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு கணவன்-மனைவி 2 பேரும் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துக் கொண்டு மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

வேலைமுடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த அமுதா வீட்டின் முன்பக்க கதவு திறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன. பீரோ இருந்த அறைக்குசென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 2 பவுன் நகை கொள்ளைபோய் இருந்தது.

இதுகுறித்து ஆரோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகரகொள்ளை சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News