ஆட்டோமொபைல்
உற்பத்தி ஆலையை தற்காலிகமாக மூடும் டொயோட்டா
தற்காலிகமாக மூடப்பட இருக்கும் ஆலையில், அரசு உத்தரவுகள் சரியாக பின்பற்றப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்களை பணியமர்த்த இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் ஏப்ரல் 26 முதல் மே 14, 2021 வரை தனது உற்பத்தி ஆலையை தற்காலிகமாக மூடுகிறது. ஆலையில் வருடாந்தர சீரமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த காலக்கட்டத்தில் பிடாடியில் செயல்படும் இரண்டு ஆலைகளும் மூடப்படுகிறது. இதனால் இரு ஆலைகளிலும் பணிகள் முழுமையாக நிறுத்தப்படும். இந்த நடவடிக்கை காரணமாக இரு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் வினியோகமும் பாதிக்கப்படும்.
தற்காலிக இடைவெளி காலத்தில் கிளான்சா, அர்பன் குரூயிசர், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் வினியோகம், சர்வீஸ் உள்ளிட்ட பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆலைகள் மூடப்பட்டு இருக்கும் போது, அரசு விதிகளுக்கு உட்பட்டு குறைந்த ஊழியர்களே பணியில் இருப்பர்.