செய்திகள்
கொள்ளை

கோவில்பட்டியில் வியாபாரி வீட்டில் ரூ.7 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2021-07-16 06:37 GMT   |   Update On 2021-07-16 06:37 GMT
கோவில்பட்டியில் இன்று அதிகாலையில் வியாபாரி வீட்டில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோபால் செட்டி தெருவை சேர்ந்தவர் வெயிலுமுத்து. பூ வியாபாரி.

வெயிலுமுத்து, அவரது மனைவி பேச்சியம்மாள், 3 வயது பேரன் செந்தில் வேலவன் ஆகியோர் நேற்றிரவு வீட்டின் முன் பகுதியிலும், மகன், மருமகள் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் மாடியிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். 

இந்நிலையில் இன்று அதிகாலையில் பேச்சியம்மாள் கழுத்தில் கிடந்த நகையை மர்மநபர் ஒருவர் பறிப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். இதனால் மர்மநபர்கள் பேச்சியமாள் கழுத்தில் இருந்த 13 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு சினிமா பாணியில் மாடி விட்டு மாடி தாவி குதித்து தப்பி ஓடினர்.

சத்தம் கேட்டு குடும்பத்தினரும் எழுந்து அந்த மர்மநபர்களை விரட்டினர். ஆனால் அருகில் உள்ள மாடியில் இருந்து குதித்து அவர்கள் தப்பி ஓடினர். தொடர்ந்து துரத்தி சென்றும் அவர்களை பிடிக்க முடியவில்லை.

பின்னர் வீட்டில் வந்து பார்த்த போது பேரன் செந்தில்வேலவன் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. மேலும் அங்குள்ள பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 2 லட்சம் ரொக்கப் பணமும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.

இது குறித்து தகவல் கிடைத்தும் மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை ஆய்வு செய்தனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபால் செட்டி தெரு மிகவும் குறுகலான தெரு மட்டுமின்றி, அடுத்தடுத்து சிறு இடைவெளி கூட இல்லமால் வீடுகள் நிறைந்த பகுதியில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டின் முன்பகுதி பூட்டப்பட்டு இருந்த காரணத்தினால் மாடி வழியாக இறங்கி பீரோவில் இருந்த பணத்தினை எடுத்து பின்னர் செந்தில்வேலவன் மற்றும் பேச்சியம்மாள் கழுத்தில் இருந்த நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News