கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 56 கிராமங்களில் சிறப்பு முகாம்- கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் பணி முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்க்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
வருகின்ற 10ந் தேதி மற்றும் ஜூன் மாதம் 7 ஆகிய தேதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள 56 கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடத்திட வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பட்டா வழங்கிடவும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதற்கான விண்ணப்பங்களை சேகரித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கால்நடை முகாம்கள் நடத்தி கால்நடைகளுக்கு மடிநோய் மற்றும் செயற்கை கருவூட்டல் பணி உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொள்ளவும், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், விவசாய கடன் அட்டை வழங்கிடும் பணி மேற்கொள்ளவும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பயிர் காப்பீடு திட்டம் குறித்தும், வேளாண் தொடர்பான அனைத்து திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என கூறினார்.
அப்போது வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி, மண்டல கால்நடை இணை இயக்குநர் மனோகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண்மை துணை இயக்குநர் சுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், தோட்ட க்கலை துணை இயக்குநர் இந்திரா, முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கூட்டுறவுத்துறை உதவி இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.