48 நாளிலேயே 2 மடங்காக உயரும் தொற்று - பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டுகோள்
சென்னை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவிய கொரோனா வைரஸ் பின்னர் ஆண்டு இறுதியில் படிப்படியாக குறைந்தது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் பாதிப்பு இரண்டு மடங்காக உயர்வதற்கு 173 நாட்கள் ஆனது. ஆனால் தற்போது கொரோனா தொற்று அதைவிட வேகமாக பரவுவது தெரிய வந்துள்ளது. தற்போதைய வைரஸ் தொற்று சீக்கிரமே இரண்டு மடங்காக உயர்வது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தற்போது பரவும் கொரோனா 48 நாட்களிலேயே இரண்டு மடங்காக அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தினசரி பாதிப்பு 10 ஆயிரம் அளவுக்கு கூட வரவில்லை. 8 ஆயிரம் பேர் வரையிலேயே பாதிப்புக்குள்ளானார்கள். இதன் பின்னர் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. ஆனால் இந்த முறை தினசரி பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் தினசரி பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்து பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் நோய் தொற்றால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது 1 லட்சத்து 10 ஆயிரத்து 308 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உயிரிழப்பும் 100-ஐ நெருங்கி உள்ளது. நேற்று 98 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் 11 லட்சத்து 30 ஆயிரத்து 167 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நோயின் பரவல் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அதிக உஷாராக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை மக்கள் மறந்துவிடக் கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர்.