நாகர்கோவிலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி உடல் கருகி பலி
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடிவீஸ்வரம் தளவாய் தெருவைச் சேர்ந்தவர் ராமசுப்பு ஆசாரி. இவரது மனைவி ஆறுமுகம் (வயது 70). இவர்களுக்கு 5 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. தற்போது ஆறுமுகம் மட்டும் வீட்டில் வசித்து வந்தார். அழகம்மன் கோவில் திருவிழா நடந்து வருவதையடுத்து நேற்றிரவு ஆறுமுகம் கோவிலுக்கு சென்றிருந்தார்.
நள்ளிரவு வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டில் ஆறுமுகம் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிந்ததையடுத்து வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்தது. சிலிண்டர் வெடித்ததில் வீட்டில் மேற்கூரை முழுவதும் எரிந்து சாம்பலானது.
தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகத்தின் மீது வீட்டின் மேற்கூரைகள் விழுந்ததுடன் தீயும் பிடித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். தீ விபத்து பற்றி தகவல் கிடைத்ததும், நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர்.
சுமார் 1 மணி நேர பேராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் நடவடிக்கையால் பக்கத்து வீடுகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்தில் வீட்டில் இருந்த ஒரு சிலிண்டர் வெடித்தது. மற்றொரு சிலிண்டர் வெடிக்கவில்லை. இந்த சிலிண்டரும் வெடித்திருந்தால் மேலும் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கும். தீ விபத்தின் காரணமாக வடிவீஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.