செய்திகள்
மழைக்காலம் தொடக்கம்: காய்ச்சல், சளி வரும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்- பிரதமர் மோடி
மழைக்காலம் தொடங்கிவிட்டது என்பதால் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொது முடக்கத்தின் 2-ம் கட்டமான அன்லாக் 2.0 தொடங்கிவிட்டது. கொரோனாவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. காலத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை. சரியான நேரத்தில் பொதுமுடக்கம் கொண்டு வரப்பட்டதால் இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது. பிறநாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாடு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது.
இப்போது செய்யக்கூடிய சிறிய தவறுகள் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம். கொரோனா விதி மீறலுக்காக ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை பார்க்கிறோம். பொதுமுடக்க தளர்வுகளால் பலர் மாஸ்க் அணியாமல் பொறுப்பற்ற முறையில் இருக்கின்றனர்.
பிரதமர் முதல் சாமானியர் வரை அனைவருக்கும் நமது நாட்டிலும் ஒரே விதிதான். பொது முடக்கத்தின் முதல் கட்டத்தில் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருந்ததை பார்க்க முடிந்தது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.