விசாரணை நடத்திய போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் - வியாபாரி கைது
கோவை:
கோவை கணபதி அத்திபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் பந்துலு. டெல்லியில் விமானப்படை அதிகாரியாக உள்ளார்.
இவரது வீட்டை பொள்ளாச்சியை சேர்ந்த வியாபாரிகள் பார்த்தசாரதி (51), பரோடா (50) ஆகியோருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். கடந்த சில மாதங்களாக வாடகை தரவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் பந்துலு போனில் வீட்டு வாடகையை பார்த்த சாரதியிடம் கேட்டார். ஆனால் அவர் பணம் தரமறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்து விமானப்படை அதிகாரி கோவை சரவணம்பட்டி போலீசுக்கு ஆன்லைனில் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
போலீசார் விசாரணை நடத்தியபோது பார்த்த சாரதி விசாரணை நடத்திய ஏட்டு சசிக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அவர் அதே போலீஸ் நிலையத்தில் பார்த்தசாரதி கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்தார். போலீசார் பார்த்த சாரதி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.