ஆன்மிகம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா 28-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-02-21 08:51 GMT   |   Update On 2021-02-21 08:51 GMT
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

28-ந் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6 மணிக்கு பஜனை, 6.30 மணிக்கு உஷ பூஜை, 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றமும், 8.30 மணிக்கு நடைபெறும் சமய மாநாடு திறப்பு விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.. வெள்ளிமலை ஆஸ்ரம தலைவர் சைதன்யானந்த மகராஜ் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.

மதியம் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, 2 மணிக்கு ஆன்மீக உரை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு பரத நாட்டியமும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது.

மறுநாளான 1-ந் தேதி காலை 6 மணிக்கு ஸ்ரீசாய்சத் சரிதம், 10 மணிக்கு மகாபாரத தொடர் விளக்கவுரை, இரவு 8 மணிக்கு இன்னிசை விருந்தும் நடக்கிறது. தொடர்ந்து 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை காலை 9.30 மணி, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, மாலை 5 மணிக்கு பரத நாட்டியமும், இரவு 9 மணிக்கு கதகளியும் நடக்கிறது.

விழாவில் 3-ந் தேதி பகல் 12 மணிக்கு அகவல் பாராயணமும், 4-ந் தேதி மாலை 3.30 மணிக்கு கர்நாடக சங்கீதமும், இரவு 9 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சியும், 5-ந் தேதி இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை பூஜையும், 6-ந் தேதி மாலை 5 மணிக்கு யோகா நிகழ்ச்சியும், 7-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு கவி அரங்கமும்,

3.30 மணிக்கு பக்தி கான இசையும், இரவு 8 மணிக்கு அகிலத்திரட்டு விளக்கவுரையும், 8-ந் தேதி மதியம் 1 மணிக்கு தெய்வீக சத்சங்க பக்தி இன்னிசையும், 2 மணிக்கு வில்லிசையும், இரவு 8 மணிக்கு பாலே என்னும் நாடகமும், 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனியும் நடக்கிறது.

விழாவில் கடைசி நாளான 9-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து களப பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, 5 மணிக்கு திருநடை அடைப்பு, 5.30 மணிக்கு பூமாலை, பகல் 12 மணிக்கு குத்தியோட்டம், 12.30 மணிக்கு சிந்தனை சொல்லரங்கம், மாலை 5 மணிக்கு நடைதிறப்பு, இரவு 9 மணிக்கு பக்தி இன்னிசை, 9.30 மணிக்கு அம்மன் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனியும், 1 மணிக்கு ஒடுக்கு பூஜையும், தீபாராதனையும் நடக்கிறது.

தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் தினசரி காலை 6.30 மணி, மதியம் 1 மணி, மாலை 6.30 மணி இரவு 9 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News