செய்திகள்
காப்பீடு முகவர் பணி-தபால் நிலையத்தில் குவிந்த பட்டதாரிகள்
கொரோனா பரவல் உள்ள நிலையில் அதிகம் பேர் குவிந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தபால் அலுவலகத்தில் பி.எல்.ஐ., போஸ்டல் லைப் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் பணிக்காக இன்று நேர்முகத்தேர்வு நடைபெறும் எனவும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து இன்று காலை ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தபால் அலுவலகத்தில் குவிந்தனர். கொரோனா பரவல் உள்ள நிலையில் அதிகம் பேர் குவிந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பெரும்பாலானோர் அரசு வேலை என்று நம்பி வந்ததாக தெரிகிறது. அவர்களிடம் அதிகாரிகள் இது அரசு வேலை கிடையாது. இன்சூரன்ஸ் முகவர் பணி. ஆட்கள் சேர்க்கும் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் சேரலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து சேர விரும்பியவர்கள் மட்டும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். மற்றவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.