செய்திகள்
சிந்து-கரோலினா மரின்

இந்திய ஓபன் பேட்மிண்டனில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

Published On 2021-04-13 20:30 GMT   |   Update On 2021-04-13 20:30 GMT
மொத்தம் ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சூப்பர் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் அடுத்த மாதம் (மே) 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது.
புதுடெல்லி:

மொத்தம் ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சூப்பர் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் அடுத்த மாதம் (மே) 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றுகளில் ஒன்றான இந்திய ஓபனில் பங்கேற்க சீனா உள்பட 33 நாடுகளை சேர்ந்த 228 வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். விலகலுக்கான கடைசி தேதி ஏப்ரல் 19-ந்தேதியாகும். மறுநாள் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

ஒலிம்பிக் சாம்பியனும், 3 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரின் (ஸ்பெயின்), நடப்பு உலக சாம்பியன் பி.வி.சிந்து (இந்தியா), அகானே யமாகுச்சி (ஜப்பான்), அன் சி யங் (தென்கொரியா), போர்ன்பவீ சோச்சுவாங் (தாய்லாந்து) உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும், 2 முறை உலக சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான கென்டோ மோமோட்டா (ஜப்பான்), நடப்பு சாம்பியன் விக்டர் ஆக்சல்சென், ஆண்டர்ஸ் அன்டோன்சென் (இருவரும் டென்மார்க்), ஆல்-இங்கிலாந்து சாம்பியன் லீ ஜியா ஸி (மலேசியா), முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் , சாய் பிரனீத், பிரனாய், காஷ்யப் (இந்தியா) உள்பட முன்னணி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்தியா மட்டும் மொத்தம் 48 பேரை களம் இறக்குகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெறும் என்று இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் தென்ஆப்பிரிக்கா, பிரேசில், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் வீரர் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். மற்ற நாட்டு வீரர்கள் 4 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், மே 3, 6, 9, 14-ந்தேதிகளில் டெல்லி அரசு சார்பில் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும் இந்திய பேட்மிண்டன் சங்கம் கூறியுள்ளது.
Tags:    

Similar News