செய்திகள்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தாயுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா போராட்டம்

Published On 2021-01-01 08:45 GMT   |   Update On 2021-01-01 08:45 GMT
காதல் கணவரை மீட்டுத்தரக்கோரி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரூர்:

கோவை மாவட்டம், அன்னூர், இந்திரா காலனியை சேர்ந்தவர் அருந்ததி. இவர் ஒரு கல்லூரியில் படிக்கும்போது கரூர் மாவட்டம் வரவணை பகுதியை சேர்ந்த வினோத்குமார் (26) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், வினோத்குமார் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த 2019 செப்டம்பர் மாதம் 16-ந்தேதி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஒரு கோவிலில் இருவரும் திருமணம் செய்துள்ளனர். அதன்பின்னர் அருந்ததி தனது காதல் கணவருடன் அன்னூர் பகுதியில் 2 மாதம் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வெவ்வேறு சமூகத்தை காரணம் காட்டி, எனது கணவர் அவரது பெற்றோருடன் சென்றுவிட்டார். அவரை மீட்டுத்தரக்கோரி அன்னூர் மற்றும் சிந்தாமணிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையே எனது கணவருக்கு 2-வது திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

எனவே எனது கணவரை மீட்டுத்தரக்கோரியும், தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு அவரது தாயுடன் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து இளம்பெண் தாயுடன் புறப்பட்டு சென்றார். மேற்கண்ட தகவல் அனைத்தையும் அருந்ததி தனது மனுவாக எழுதி போலீசாரிடம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News