செய்திகள்
உடுமலை அருகே சாலையோரம் உள்ள பள்ளத்தில் வேன் சிக்கி விபத்துக்குள்ளாகி இருப்பதை படத்தில் காணலாம்.

உடுமலை அருகே பள்ளத்தில் வேன் பாய்ந்து டிரைவர் பலி

Published On 2020-11-17 02:21 GMT   |   Update On 2020-11-17 02:21 GMT
உடுமலை அருகே பள்ளத்தில் வேன் பாய்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
உடுமலை:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆவரம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகைக்கனி (வயது 31). கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் அவினாசியில் இருந்து கூரியர் தபால்களுடன் நேற்று உடுமலைக்கு வந்தார். பின்னர் வேனுக்கு டிங்கர் வேலை செய்வதற்காக கோவைக்கு புறப்பட்டுள்ளார்.

மதியம் உடுமலை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடுமலையை அடுத்த முக்கோணம் அருகே சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் உள்ள சேற்றில் சிக்கி பள்ளத்திற்குள் பாய்ந்தது. முன்னதாக மரத்தின் கிளையிலும் மோதியது.

இந்த விபத்தில் வேனில் இருந்து கீழே விழுந்த டிரைவர் கார்த்திகைக்கனி, வேனின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் உடுமலை போலீசார் மற்றும் தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கிய வேன் பள்ளத்தில் இருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

இந்த விபத்தில் உயிரிழந்த வேன் டிரைவர் கார்த்திகைக்கனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News