உள்ளூர் செய்திகள்
மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் மே 20-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
இந்த ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சி 20-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.
நீலகிரி:
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதனை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்வார்கள். கொரோனா தொற்று காரணமாக மலர் கண்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சி வரும் 20ந்தேதி தொடங்கி 24ந்தேதி வரை நடக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 20-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலகங்கள் உள்படமுக்கிய அலுவலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 20-ந் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. 20ந் தேதி விடுமுறை ஈடு செய்யும் வண்ணம் ஜூன் 4-ந் தேதி வேலை நாளாக இயங்கும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் அறிவித்துள்ளார்.