செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் 40 சதவிகிதம் பேர் முக கவசம் அணியவில்லை - முதலமைச்சர் பழனிசாமி
திருவள்ளூர் மாவட்டத்தில் 40% பேர் முக கவசம் அணியவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. இருப்பினும் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று, முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் மாவட்டத்தில் 12 புதிய திட்டப்பணிகளை தொடக்கி வைத்த முதல்வர் பழனிசாமி, 7,528 பயனாளிகளுக்கு ரூ.51.68 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், திருவள்ளூர் மாவட்டத்துக்கு தான் வரும் வழியில் 40% மக்கள் முக கவசம் அணியவில்லை என்பதை பார்த்ததாகவும் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. மேலும், விவசாயிகளை உள்ளடக்கிய குடிமராத்து பணிகளை செயல்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.