விஜய பிரபாகரனுக்கு, கொங்கு மண்டல மணப்பெண்- பிரேமலதா விஜயகாந்த்
திருப்பூர்:
திருப்பூரில் தே.மு.தி.க. முப்பெரும் விழா நடந்தது. விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பேசியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. அமோக வெற்றி பெற கட்சியினர் உழைக்க வேண்டும். தே.மு.தி.க. மாபெரும் எழுச்சி பெற்று விஜயகாந்த் தலைமையில் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தே தீரும்.
எனது மகன் விஜயபிரபாகரனுக்கு விரைவில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த மணப்பெண்ணுக்கும் திருமணம் நடைபெறும் என்றார்
விழாவில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
உங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு நாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்துக்காக விடியும். அப்போது தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன். அடுத்த முறை வரும் போது உங்களிடம் ஒரு மணி நேரம் பேசுவேன்.
இது போல் தமிழகம் முழுவதும் செல்வேன். இந்த விழாவில் பங்கேற்க வந்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முப்பெரும் விழாவில் விஜயகாந்த் 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.
கடந்த ஒரு ஆண்டாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த விஜயகாந்த் முதல் முறையாக திருப்பூர் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டார். இந்த முப்பெரும் விழாவில் அவர் நீண்ட நேரம் பேசுவார் என தொண்டர்கள் காத்திருந்தனர்.
ஆனால் அவர் 2 நிமிடமே பேசியது தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.