ஆன்மிகம்
மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்ட போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது: 6-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு

Published On 2019-12-28 04:53 GMT   |   Update On 2019-12-28 04:53 GMT
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது. 6-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று முன்தினம் தொடங்கியது.

பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார். காலை 8.15 மணி முதல் மதியம் 1 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்ய பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.

மாலை 6.30 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பகல் பத்தின் முதல் நாளான நேற்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.

இதேபோல, பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (ஜனவரி 5-ந் தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ஜனவரி மாதம் 6-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். 12-ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும். 13-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.

சொர்க்கவாசல் திறப்பு தினமான 6-ந் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ராப்பத்து 7-ம் திருநாளான 12-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 8-ம் திருநாளான 13-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 10-ம் திருநாளான 15-ந் தேதி தீர்த்த வாரியும், 16-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News