செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

2016-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் 2 சதவீதம் வாக்குகள் குறைந்தது ஏன்?

Published On 2021-04-07 07:08 GMT   |   Update On 2021-04-07 07:33 GMT
வாக்காளர்களில் பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். சென்னையில் இருந்து மட்டும் சுமார் 6 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
சென்னை:

தமிழக சட்டசபைக்கு கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது 234 தொகுதிகளிலும் 74.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆண் வாக்காளர்களில் 74.15 சதவீதம் பேரும், பெண் வாக்காளர்களில் 74.33 சதவீதம் பேரும் வாக்களித்து இருந்தனர்.

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மிக மிக குறைவாக சென்னையில் 55 சதவீத வாக்குகள்தான் பதிவானது.

இந்த தடவை ஓட்டுப்பதிவு சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் தற்போது சுமார் 2 சதவீத வாக்குகள் குறைவாகவே பதிவாகி இருக்கிறது. அதாவது இந்த தடவை 72.78 சதவீதம் வாக்குகளே பதிவாகி உள்ளது.

ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தல், கோடை வெயில், முறையாக பூத் சிலிப் வழங்காதது, பெயர் விடுபட்டது, வெளியூர் பயணம் போன்றவை முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.

தமிழகத்தில் நன்றாக குறைந்து வந்த கொரோனா தொற்று கடந்த 2 வாரங்களாக மிக வேகமாக பரவியபடி உள்ளது. கடந்த 5 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு தலா 3 ஆயிரத்துக்கும் மேலாக உள்ளது. இது பலரை வாக்குச்சாவடிக்கு வரவிடாமல் தடுத்து விட்டது.

ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களில் பலரும் கூட்டம் அதிகமாக இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று மீண்டும் நோயை வாங்கி விடக்கூடாது என்று பயந்தனர். இதனால் பெரும் பாலான வாக்குச்சாவடிகளில் வாக்கு சதவீதம் குறைந்ததாக கருதப்படுகிறது.



தமிழகத்தில் அடுத்த மாதம் தான் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. ஆனால் இப்போதே கடுமையான வெயில் வாட்டி வதைத்தபடி உள்ளது. இதன் காரணமாக முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வர ஆர்வம் காட்டவில்லை.

வாக்குச்சாவடிகளில் முதியோர்களுக்கு தேவையான வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை. இதுவும் முதியோர்கள் வாக்குச்சாவடிக்கு வராததற்கு முக்கிய காரணம் ஆகும்.

வாக்காளர்களில் பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். சென்னையில் இருந்து மட்டும் சுமார் 6 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

சென்னையில் வாக்குரிமை இருந்தாலும் கொரோனா கட்டுப்பாடு வரக்கூடும் என்ற பயத்தில் பலர் சென்னையை காலி செய்துள்ளனர். இதே போன்றுதான் முக்கிய நகரங்களில் இருந்து வாக்காளர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இதுவும் வாக்குப்பதிவுக்கு இடையூறாக மாறிவிட்டது.

வழக்கமாக ஒவ்வொரு வாக்காளரும் மிக எளிதாக வாக்களிப்பதற்காக அரசியல் கட்சிகளே பூத் சிலிப் தயார் செய்து கொடுக்கும். தேர்தல் ஆணையம் அதற்கு தடை விதித்து தாங்களாகவே பூத் சிலிப் வழங்கியது. ஆனால் அந்த பூத் சிலிப் அனைத்து தொகுதிகளிலும் 100 சதவீதம் வெற்றிகரமாக வினியோகிக்கப்படவில்லை.

90 சதவீதம் பேருக்கு பூத் சிலிப் கிடைக்கவில்லை. குறிப்பாக சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு பூத் சிலிப் வழங்குவதில் பெரும் இடையூறு காணப்பட்டது. தேர்தல் ஆணையம் பூத் சிலிப் வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் அதிக வாக்குப்பதிவு கிடைத்திருக்கலாம்.

அதுபோல பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற குழப்பம் இருந்தது. சென்னையில் ஒரு தொகுதியில் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் விடுபட்டு இருந்தன.
Tags:    

Similar News