செய்திகள்
ஊரடங்கை மீறி சுற்றியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை படத்தில் காணலாம்.

பெங்களூருவில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து 46,500 வாகனங்கள் பறிமுதல்

Published On 2021-06-11 04:11 GMT   |   Update On 2021-06-11 04:11 GMT
பெங்களூருவில் ஊரடங்கின் போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது என்.டி.எம்.ஏ. சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.
பெங்களூரு :

பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது தேவையில்லாமல் சுற்றித்திரியும் நபர்களிடம் இருந்து போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். நேற்று முன்தினத்தில் இருந்து நேற்று காலை வரை ஊரடங்கு உத்தவை மீறியதாக 753 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், பெங்களூருவில் கொரோனா 2-வது அலைக்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் போது, நேற்று காலை வரை ஒட்டு மொத்தமாக 46,488 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றில் 41,370 இருசக்கர வாகனங்கள், 2,264 மூன்று சக்கர வாகனங்கள், 2,808 நான்கு சக்கர வாகனங்கள் ஆகும். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்த இடம் இல்லாத காரணத்தால் ஐகோர்ட்டு உத்தரவின்படி அபராதம் வசூலித்து விட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணியில் தற்போது போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பெங்களூருவில் ஊரடங்கின் போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது என்.டி.எம்.ஏ. சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். அதன்படி, பெங்களூருவில் கடந்த ஒரு மாதத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக என்.டி.எம்.ஏ. சட்டப்பிரிவின் கீழ் ஒட்டு மொத்தமாக 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் என 440 பேரை இதுவரை கைது செய்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News