லைஃப்ஸ்டைல்
பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய மாற்றங்கள்

பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய மாற்றங்கள்

Published On 2019-09-12 02:45 GMT   |   Update On 2019-09-12 02:45 GMT
பெண்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை, அவர்களின் வளர்ப்பு முறையிலேயே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் வளர்ப்பு முறையிலேயே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். பருவமடைந்த பெண்களுக்கு உளுந்தங்களி, நல்லெண்ணெய் சேர்த்துக் கொடுப்பார்கள். கார் அரிசிப் புட்டும், நல்லெண்ணெயில் உளுந்தவடை செய்து கொடுப்பதும் வழக்கமாக இருந்திருக்கிறது. நலுங்கு வைப்பதும் அந்தக் காலத்தில் வழக்கில் இருந்தது. வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு போன்றவை சேர்ந்த நலுங்கு மாவைப் பூசி மேலே சொன்ன உணவுகளை உண்ணக் கொடுப்பதன் மூலம் பெண்கள் நல்ல உடல் வளம் பெறுவார்கள். இது தமிழர் கலாசாரத்தில் ஒன்றாகவே இருந்திருக்கிறது.

சிறப்பு உணவுகளாக கற்றாழை லேகியம் கொடுப்பார்கள். கற்றாழையைப் பூப்பெய்திய பெண்களுக்குக் கொடுப்பதால் அது மாதவிடாய் பூப்பு அழற்சியை ஒழுங்குபடுத்தும். இது மெட்டபாலிசத்தைச் சரிசெய்யும். சர்க்கரைநோய், மூலம், கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.

இன்றைக்கு வளரிளம் பெண்களுக்கு சிவப்பணுக்கள் குறைவாக உள்ளன. மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, 15 நாள்கள் இடைவெளியில் மாதவிடாய் ஆவது, நீண்டநாள் மாதவிடாய் வராமல் இருப்பது போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன. இதுபோன்ற குறைபாடுகள் வராமலிருக்க எள், உளுந்து போன்றவற்றில் சாதம் செய்து சாப்பிடுவது, கீரைகளை அதிகம் சாப்பிடுவது, மாதுளம்பழத்தை சாப்பிடவேண்டியது அவசியம். இவை மாதவிடாய் சுழற்சி உண்டாக பெரிதும் உதவும்.

பெண்களுக்கு ஏற்படும் உடல்சூட்டால் வெள்ளைப்படுதல் ஏற்படும். இந்த வெள்ளைப்படுதலாலும் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படலாம். பெண்களின் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று காரணமாக விந்தணுக்கள் உயிரிழக்க வாய்ப்பு உண்டு. இதுபோன்ற சூழலில் சாதாரண படிகாரத்தைப் பொடியாக்கி, தண்ணீரில் கரைத்துக் கழுவினால், கிருமிகள் அழிக்கப்பட்டுவிடும்.

இப்போதெல்லாம் தரமற்ற, ரசாயனம் பூசப்பட்ட நாப்கின்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு பிறப்புறுப்பில் நோய்க்கிருமிகள் உண்டாகி பாதிப்பு ஏற்படுகிறது. நமது தட்பவெப்பநிலைக்கு ஏற்ற உடைகளைப் பெண்கள் அணிய வேண்டும் என்று நம் பாரம்பர்ய தமிழர் கலாசாரத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்டது. தாவணி, புடவை உடுத்துவது இடுப்புப் பகுதியில் உள்ள வெப்பநிலையைச் சமநிலைப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

கர்ப்பப்பையின் தசைகள் லகுவாக சம்மணம் போட்டு தரையில் அமர்வது, பாண்டி ஆட்டம் ஆடுவது போன்ற விளையாட்டுகள் உதவும். எண்ணெய்க் குளியல், காய்கறிகள், பழங்கள், மோர், இளநீர் போன்ற இயற்கை பானங்களை அதிகம் அருந்த வேண்டும். சிலர் `சீஸ் சாப்பிடுகிறார்கள். அது நம் பெண்களுக்கு ஆகாது. அதற்குப் பதில் நெய் சாப்பிடலாம்.
Tags:    

Similar News