இந்தியா
நடு ரோட்டில் போராட்டக்காரர்கள் டயர்களுக்கு தீ வைத்த காட்சி

ரெயில்வே தேர்வு முறைகேடு விவகாரம்- பீகாரில் இன்று முழு அடைப்பு

Published On 2022-01-28 08:20 GMT   |   Update On 2022-01-28 10:07 GMT
பீகார் தலைநகர் பாட்னா உள்பட மாநிலம் முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. போராட்டக்காரர்கள் பாட்னாவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாட்னா:

காலியாக உள்ள தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களுக்கு ரெயில்வே வாரியம் 2 கட்ட மாக தேர்வு அறிவித்து இருந்தது. அதன்படி முதல் நிலை தேர்வு நடந்தது. 2-ம் நிலை தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

இந்த தேர்வு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என கூறி தேர்வு எழுதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ரெயில் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.

கயா ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட் டிருந்த ரெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதிர்ஷ்டவசமாக ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

போராட்டத்தை அடுத்து தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. வன்முறை சம்பவம் தொடர்பாக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து பீகாரில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அகில இந்திய மாணவர் சங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்து இருந்தன. அதன்படி பீகாரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

பீகார் தலைநகர் பாட்னா உள்பட மாநிலம் முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. போராட்டக்காரர்கள் பாட்னாவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் நடுரோட்டில் டயர்களுக்கு தீ வைத்தனர். பல இடங்களில் நடந்துவரும் போராட்டங்களால் பீகாரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்... விஜய் வழக்கு - உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

Tags:    

Similar News