உள்ளூர் செய்திகள்
மாயமான சகோதரர்கள் நித்தீஸ், வித்தீஸ் ஆகியோரை படத்தில் காணலாம்.

விளையாட சென்ற சகோதரர்கள் திடீர் மாயம்

Published On 2022-01-18 06:59 GMT   |   Update On 2022-01-18 06:59 GMT
அறந்தாங்கி அருகே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சகோதரர்கள் 2 பேர் திடீரென்று மாயமானார்கள்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கற்பூரசுந்தரேஸ்வரபாண்டி (வயது 29). இவர் தனது மனைவி சுந்தரி (26) மற்றும் மகன்கள் நித்தீஸ் (6), வித்தீஸ் (4) ஆகியோருடன் கும்பகோணத்தில் தங்கி டீ கடை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சுந்தரியோடு   ஏற்பட்ட   கருத்து வேறுபாட்டால், அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் அவர் தனது இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரான திருநாளூருக்கு வந்து வாழ்ந்து வந்துள்ளார்.

நேற்று சிறுவர்கள் நித்தீஸ் மற்றும் வித்தீஸ் ஆகிய இருவரும் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாகச் சென்ற சுந்தரேஸ்வரபாண்டியின் சகோதரர் செல்லபாண்டி, சிறுவர்களை வீட்டிற்கு செல்லும்படி கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் சிறுவர்கள் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே விளையாடிக்கொண்டு  இருந்துள்ளனர்.

நண்பகல் 2 மணியைத்தாண்டியும் சிறுவர்கள் வீட்டிற்கு வராததையடுத்து, தெருவில் சென்று பார்த்தபோது அவர்களை காணவில்லை. இதையடுத்து கற்பூர சுந்தரேஸ்வரபாண்டி மற்றும் உறவினர்கள் சிறுவர்களை தேடிச்சென்றனர். சிறுவர்கள் விளையாடக்கூடிய இடங்கள், வீட்டருகே உள்ள குளக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

ஆனால் எங்கு தேடியும் சிறுவர்கள் கிடைக்கவில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவர்கள், அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.  புகாரின்  அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன சிறுவர்களை தீவிர மாகத்தேடி வருகின்றனர்.

சிறுவர்களை யாராவது மர்ம நபர்கள் கடத்தி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்டருகே தெருவில் விளையாடி கொண்டிருந்த 2 சிறுவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News