திருமங்கலம் அருகே கார் மரத்தில் மோதல்- வாலிபர் பலி
திருமங்கலம்:
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தேவிபட்டினத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 35). இவர் மற்றும் உறவினர்கள் காரில் ராஜபாளையத்தில் இருந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுவிட்டு மீண்டும் ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியை அடுத்த பி.அம்மாபட்டி சாலை வளைவில் செல்லும்போது கார் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
இதில் காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த தங்கராஜ் தலையில் காயம்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
டிரைவர் சங்கர் (66), அய்யம்மாள், பிரேமா தேவி, திலகம் ஆகியோர் காயம் அடைந்தனர்.
தகவலறிந்த டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.