செய்திகள்
வாக்காளர் பட்டியலில் இருந்து புலம் பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை- கலெக்டர் தகவல்
வாக்காளர் பட்டியலில் இருந்து புலம் பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின், இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் (ஜனவரி) வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் புலம்பெயர்ந்த, இறந்த வாக்காளர்கள் பெயர் இடம்பெற்றிருப்பதாக புகார்கள் வந்தது. இதுதொடர்பாக விரிவான களஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதன்பேரில் சில வாக்காளர்கள், வேறு தொகுதிகளுக்கும் மற்றும் பிற மாநிலத்திற்கும் புலம் பெயர்ந்து இருப்பதாகவும், சிலர் இறந்து விட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய புதிய பட்டியல், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் துறையின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு ஆட்சேபனை இருந்தால் 7 நாட்களுக்குள் வாக்காளர் பதிவு அதிகாரியின் முன் தகுந்த ஆதாரத்துடன் ஆஜராகி தெரிவிக்க வேண்டும். ஆட்சேபனை இல்லாவிட்டால் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.