செய்திகள்
கடந்த 4-5 ஆண்டுகளில் 10-15 சதவீதம்தான் உயர்ந்துள்ளது- இது மிகப்பெரிய உயர்வு இல்லை: ஹரியானா முதல்வர்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில், மக்களிடம் வசூலிக்கப்படும் எந்த வருவாயாக இருந்தாலும் அது மக்களுக்காகத்தான் அரசு பயன்படுத்துகிறது என ஹரியானா முதல்வர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜெட் வேகத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்றிரண்டு மாநிலங்களில் பெட்ரோல் விலை 100-ஐ தொட்டுவிட்டது. மற்ற மாநிலங்களில் 100-ஐ நெருங்கி வருகிறது.
மத்திய அரசும், மாநில அரசும் அதிகமாக வரி வசூல் வசூலிக்கிறது. மத்திய அரசிடம் கேட்டால், மாநில அரசு வரியை குறைக்கலாம் எனக் கூறுகிறது. மாநிலங்களிடம் கேட்டால் மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும் என்கிறது.
இந்த நிலையில் ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில் ‘‘கடந்த 4-5 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10 முதல் 15 சதவீதம் வரைதான் உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இது அதிகம் கிடையாது. என்றாலும், அரசு எந்தவகையில் வருவாய் ஈட்டினாலும், அது மக்களுக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது. எங்களுடைய வாட் வரியை ஒப்பிட்டு பார்த்தால் ஓரளவிற்கு மற்ற மாநிலங்களை விட குறைவுதான்’’ என்றார்.
இதனால் ஹரியானா மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசம் மீதான வாட் வரியை குறைக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.