செய்திகள்
தலிபான் பயங்கரவாதிகள்

9 பேரை தவிர 391 தலிபான் பயங்கரவாதிகளையும் விடுதலை செய்தது ஆப்கானிஸ்தான் அரசு

Published On 2020-09-03 23:59 GMT   |   Update On 2020-09-04 01:53 GMT
பேச்சுவார்த்தையை கருத்தில் கொண்டு சிறையில் இருந்த எஞ்சிய 400 தலிபான் பயங்கரவாதிகளில் 391 பேரை ஆப்கானிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்தது.
காபுல்:

ஆப்கானிஸ்தானில் 2001 முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் இருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்க ஒப்புக்கொண்டது. அதன்படி ஆயிரக்கணக்கான அமெரிக்க படையினர் திரும்பப்பெறப்பட்டுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள 5 ஆயிரம் பயங்கரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்தனர். 

இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால்தான் ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவிப்போம் எனவும் தங்கள் பிடியில் உள்ள 1,000 பேரை விடுவிப்போம் எனவும் தலிபான் பயங்கரவாதிகள் கெடு விதித்தனர்.

இதையடுத்து, ஆப்கானிஸ்ஸ்தான் சிறையில் பலகட்டங்களாக 4 ஆயிரத்த் 600 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஒப்பந்தத்தில் எஞ்சிய 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்ய ஆப்கானிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்து வந்தது. 

இந்த 400 பயங்கரவாதிகளும் உலகிற்கே ஆபத்தானவர்கள் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி எச்சரிக்கை விடுத்தார்.  

இந்த பயங்கரவாதிகளில் 150 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக காத்திருந்தவர்கள். 44 பேர் அமெரிக்காவின் ஆபத்தானவர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்கள். 

மேலும், 9 பயங்கரவாதிகள் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர்களை கொன்றவர்கள் ஆவர்.

இதனால், தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை கொன்ற பயங்கரவாதிகளை விடுதலை செய்யக்கூடாது என ஆப்கானிஸ்தான் அரசிடம் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா தெரிவித்தது.

இதற்கிடையில், அமைதிப்பேச்சுவார்த்தையை கருத்தில்கொண்டு தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்யும் பணியை ஆப்கானிஸ்தான் அரசு நேற்று தொடங்கியது. பல பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டன. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் சிறைகளில் இருந்த 400 தலிபான் பயங்கரவாதிகளில் கிட்டத்தட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 400 பயங்கரவாதிகளில் 391 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 9 பேர் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டினரை கொன்ற சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் எனவும் அவர்களை விடுதலை செய்ய அந்நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் விடுதலை நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் - தலிபான்கள் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை கத்தார் நாட்டில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், இந்த 9 பயங்கரவாதிகளும் கத்தார் 
நாட்டுக்கு கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் சிறையில் மொத்தம் இருந்த 5 ஆயிரம் பயங்கரவாதிகளில் 4 ஆயிரத்து 991 பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனால், ஆப்கானிஸ்தான் அரசுடன் தலிபான் பயங்கரவாதிகள் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை எஞ்சிய 9 பயங்கரவாதிகளையும் விடுதலை செய்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என தலிபான்கள் தெரிவிக்கும் பட்சத்தில் அமைதிபேச்சுவார்த்தை நடைபெறுவதில் மேலும் சிக்கல் ஏற்படலாம்.

தலிபான்கள் எஞ்சிய 9 பயங்கரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என கோரிக்கை விடும் பட்சத்தில் ஆப்கான்ஸ்தான், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் இந்த விவகாரத்தை எவ்வாறு கையாலும் என்பது புதிராக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Tags:    

Similar News