செய்திகள்
கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஜோதிடர் பலி
கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்த ஜோதிடர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ராஜீவ்காந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் திலக் (வயது 43). ஜோதிடரான இவர் கோவில்பட்டி மாதாங்கோவில் தெருவில் உள்ள தனியார் கட்டிடத்தில் ஜாதகம் பார்க்கும் தொழில் செய்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி அருகே வெங்கடேஸ்வரபுரத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். குமாரபுரம் காலனி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த திலக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி திலக் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.