செய்திகள்
பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர்

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீரை கூடுதலாக திறக்க வேண்டும்- ஆந்திர அரசுக்கு கடிதம்

Published On 2020-02-27 08:19 GMT   |   Update On 2020-02-27 08:19 GMT
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து வழங்க வேண்டும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்க வேண்டும்.

அதன்படி செப்டம்பர் 28-ந் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருகிறது. சராசரியாக வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது.

ஆந்திர விவசாயிகள் தற்போது கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் எடுத்து வருவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இன்று 267 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த தகவலை பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் தெரிவித்தார்.

கடந்த மாதம் திருப்பதியில் நடைபெற்ற கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை கூட்டத்திலும் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. தற்போது ஏரியில் 1616 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 453 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கன அடி தண்ணீரும் அனுப்பப்படுகிறது.

Tags:    

Similar News