செய்திகள்
பிரேமலதா

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிப்பதா? பிரேமலதா கண்டனம்

Published On 2019-09-03 10:10 GMT   |   Update On 2019-09-03 10:10 GMT
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மதுரை:

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். தமிழிசை சவுந்தரராஜன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்வில் கட்சிக்காக உழைத்துள்ளார்.

அவரது உழைப்புக்கும், நம்பிக்கைக்கும் கிடைத்த பரிசு தான் கவர்னர் பதவி. இதனை எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது தேவையற்றது.

எதிர்க்கட்சி என்பதால் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. இருக்கிறது.

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர். அதே போலத்தான் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வெளிநாடு சென்றுள்ளார்.


தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது பயணம் உள்ளது. அதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.

முதல்-அமைச்சரின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் மேலாண்மை செய்ய முடியும் என முதல்-அமைச்சர் தெளிவாக கூறிவிட்டுத்தான் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். எனவே அவரது வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News