செய்திகள்

நடிகர் சங்க தேர்தலை ஜூன் 23ம் தேதி நடத்தலாம்- ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Published On 2019-06-21 16:32 GMT   |   Update On 2019-06-21 16:32 GMT
நடிகர் சங்க தேர்தலை ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 23-ம் தேதியே நடத்தலாம். ஆனால் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.

இவ்விரு அணிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிக்க இருப்பதாக அறிவித்தார்கள்.

தற்போது அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. அந்த இடம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும் மாற்று இடத்தை பரிந்துரைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. இதையடுத்து, தென்சென்னை பதிவாளர் நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்ததற்கு எதிராக விஷால் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்க தேர்தலை ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 23-ம் தேதி நடத்தலாம் என அனுமதி அளித்துடன், தேர்தலில் பதிவான  வாக்குகளை எண்ணக்கூடாது என  உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தது.
Tags:    

Similar News