உள்ளூர் செய்திகள்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
மதுரை
மதுரை மாவட்டம் பேரையூர் சின்னக்கட்டளை மேலத்தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம் மனைவி சீதா (வயது 60). இவர்களது மகளை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்த்துள்ளார். சீதா மகளுக்கு உதவியாக, அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கி இருந்தார்.
நேற்று நள்ளிரவு சீதா மருத்துவமனையில் படுத்து தூங்கினார். அப்போது அவர் அணிந்திருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்புடைய தங்கச்சங்கிலியை காணவில்லை. இதுகுறித்து சீதா மதிச்சியம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு காமிராபதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் மூதாட்டி சீதாவிடம் அடையாளம் தெரியாத பெண் தங்கச்சங்கிலியை பறித்துச் செல்வது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கி இருந்த பெண்கள் சிலரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு பெண் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், திருடும் நோக்கத்துடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தனியாக தங்கி இருந்தது தெரியவந்தது.
அவர் பழங்காநத்தம் தெற்குதெருவை சேர்ந்த முத்துமணி மனைவி நிவேதா (21) என்பது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனைதொடர்ந்து மூதாட்டி சீதாவிடம் நகை பறித்த நிவேதாவை போலீசார் கைது செய்தனர்.