ஆன்மிகம்
ஐயப்பன்

தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்

Published On 2020-11-23 08:52 GMT   |   Update On 2020-11-23 08:52 GMT
கீழ்கண்ட நடைமுறைகளை தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் தவறாமல் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், சபரிமலை பயணத்தின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை கேரள அரசு வகுத்துள்ளது.

கீழ்கண்ட அந்த நடைமுறைகளை தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் தவறாமல் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நடைமுறைகள் விவரம் வருமாறு:-

*அனைத்து பக்தர்களும் காவல்துறையின் மெய்நிகர் வரிசை(விர்ச்சுவல் கியூ)க்கான https://sabarimalaonline.org என்ற வலைத்தள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.

*தொடக்கத்தில் வார நாட்களில் நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களும், வார இறுதி நாட்களில் நாளொன்றுக்கு 2 ஆயிரம் பக்தர்களும் மட்டுமே, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

*தரிசன நேரத்திற்கு முன்னதாக 24 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட ‘கொரோனா தொற்றின்மைச் சான்று’ பதிவுக்குக் கட்டாயமாகும். மற்றவர்களுக்கு உதவிட, நுழைவு வாயில்களில் கட்டண அடிப்படையில் ‘ஆன்டிஜென்’ சோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

*கடந்த காலத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், 10 வயதிற்கும் குறைவானவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதயம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பிற இணை நோய் உள்ளவர்கள் எந்த வயதினரானாலும் சபரிமலை புனிதப்பயணத்திற்கு கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள்.

*காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளவர்கள் சபரிமலை தரிசனம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

*பயணம் மேற்கொள்ளும் போது வாய் மற்றும் மூக்கை சரியாக மறைக்கும் முககவசம் அணிந்து கவனமாக இருக்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட முககவசத்தை பொது இடங்களில் தூக்கி எறியக் கூடாது.

*கைகளை அடிக்கடி சோப்பு உபயோகித்து கழுவ வேண்டும். மேலும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எப்போதும் சானிடைசர் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தவும்.

* வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோருக்கான அட்டை, ‘ஆயுஸ்மான் பாரத்’ அட்டை போன்றவற்றை வைத்துள்ளவர்கள், தங்கள் பயணத்தின்போது அவற்றை உடன் கொண்டுவர வேண்டும்.

* நெய் அபிஷேகம் செய்யவும், பம்பா ஆற்றில் குளிக்கவும், சன்னிதானம், பம்பா மற்றும் கணபதி கோவில் ஆகிய இடங்களில் இரவு தங்கவும் அனுமதிக்கப்படமாட்டாது.

* எருமேலி மற்றும் வடசேரிக்கரா ஆகிய 2 வழிகளில் மட்டுமே சபரிமலை புனிதப்பயணம் மேற்கொள்ள தமிழக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News