ஆன்மிகம்
மகான்களும் பசுவும்

மகான்களும் பசுவும்

Published On 2019-09-04 07:46 GMT   |   Update On 2019-09-04 07:46 GMT
பசுவின் தெய்வீகத்தை உலகம் உணரும் வகையில் மகான்கள் பலரும் பசுவினைப் போற்றி, பசுவிற்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அதனைப் போக்க தங்கள் உயிரைத் தரவும் சித்தமாயிருந்தனர். இதனை நம் புராணங்களில் காணலாம்.
பசுவின் தெய்வீகத்தை உலகம் உணரும் வகையில் மகான்கள் பலரும் பசுவினைப் போற்றி, பசுவிற்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அதனைப் போக்க தங்கள் உயிரைத் தரவும் சித்தமாயிருந்தனர். இதனை நம் புராணங்களில் காணலாம்.

கிருஷ்ணர்

மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ணர் பசுவைப் பராமரிக்கும் யாதவ குலத்திலேயே அவதரித்தார். கோபாலன் என்னும் பெயரே பசுக்களைக் காப்பாற்றுபவர் என்னும் பொருளில் அமைந்ததுதான். ஸ்ரீகிருஷ்ணன் கோகுலத்தில் பசுக்களுடன் வாழ்ந்தார். பசுவின் பாலைக் குடித்தார். வெண்ணெயைத் திருடி உண்டார், தயிரை உண்டார். அவற்றை தன பக்தர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தார். மனித மனமானது பாலைப் போல தூய்மையாக இருக்க வேண்டும். சிந்தனை தயிரைப் போல குளிர்ச்சியாக இருக்க வேண்டும். பிறருக்காக மனமானது வெண்ணெய் போல உருக வேண்டும். அவ்வாறு இருந்தால் மனிதன் இறையருளைப் பெறுவதோடு, தானும் இறைத்தன்மையை அடைகிறான். பசுக்களின் பெருமையை உணர்த்தவே பரந்தாமன் கோகுலத்தில் அவதரித்தார்.

திருமூலர்

மூலன் என்னும் பசு மேய்க்கும் இடையன் இறந்து கிடக்க, அவனைச் சுற்றி பசுக்கள் கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தன. அவ்வழியே வந்த சுந்தரநாதர் என்னும் யட்சர் பசுக்களின் துன்பத்தைக் கண்டு மனம் வருந்தினார். அவர் தனது யோக சித்தியினால் தனது உடலை மரத்தின் மேல் கிடத்தி விட்டு, மூலனின் உடலில் புகுந்தார். மூலன் உயிர் பெற்று எழுந்து வந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்தன. பிறகு அவர் தன் உடலைக் காணாமல் மூலனின் உடலிலேயே வாசம் செய்ததால் திருமூலர் என்று பெயர் பெற்றார்.

சண்டேசுவரர்

பசு மேய்ப்பவன் பசுவைக் கோலால் அடிப்பதைக் கண்டு மனம் பொறுக்காமல் மேய்ப்பவனை விலக்கி தானே பசுக்களை மேய்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். விசாரசருமர் என்பவர் அப்பசுக்களை மேய்க்கும் காலத்தில் அப்பசுக்கள் தாமாகச் சொரியும் பாலைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடலானார். விசாரசருமரின் செயலைக் கண்ட அவனது தந்தையார் உண்மையை அறியாமல் அப்பால் குடத்தைக் காலால் எட்டி உதைத்தார். சிவபூஜைக்கு இடையூறு செய்ததால் தந்தையென்றும் பாராமல் அவரது காலைத் துண்டித்தார் விசாரசருமர். தந்தையாக இருந்தும் சிவபூஜைக்கு இடையூறு செய்தவரைத் தண்டித்த உறுதியைக் கண்ட சிவபெருமான் இருவருக்குமே அருள் புரிந்தார். விசாரசருமருக்கு, சிவவழிபாட்டின் பயனை நல்கும் சண்டேஸ்வரர் என்னும் பதவியையும் அளித்தார்.

ஆனாய நாயனார்

தனது புல்லாங்குழலில் பஞ்சாட்சர மந்திரத்தை இசைத் தபடி பசுக்களை மேய்த்து சிவபுண்ணிய கைங்கரியம் செய்தவர் அனாயநாயனார்.

ஞானப்பிரகாசர்

இலங்கையில் வசித்தவர் ஞானப்பிரகாசர். சில நூற்றாண் டுக்கு முன்பு அங்கு போர்த்துக்கீசியர் ஆட்சி நடைபெற்றது. அவர்கள் அன்றாடம் தங்கள் உணவுக்கு பசு ஒன்றினை அனுப்பும்படி ஒவ்வொரு வீட்டாரிடமும் உத்தரவிட்டனர். ஒரு நாள் ஞானப்பிரகாசரின் முறை வந்தது. பசுக் கொலையாகிய கொடிய பாவத்தைச் செய்ய அவருக்கு மனம் ஒப்பவில்லை. எனவே அவர் தன் சொத்துக்கள் அனைத்தையும் விட்டு விட்டு நாட்டிலிருந்தே வெளியேறினார். மனு நீதித் சோழனின் புதல்வன் ரதத்தில் செல்லும் போது பசுவின் கன்று ரதத்தில் அகப்பட்டு உயிரிழந்தது. அதனை அறிந்த மன்னன் மனு நீதிச் சோழன், தன் மகனையும் படுக்க வைத்து அவன் மீது ரதத்தை ஏற்றிக் கொல்லத் துணிந்தான் என்பது நாம் அனைவரும் அறிந்த வரலாறாகும்.

இவ்வாறு நம் நாட்டில் பசுவினைப் போற்றும் வழக்கம் அன்றும் இன்றும் இருந்து வருகிறது.
Tags:    

Similar News