செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொடுத்த அதே வாய்ப்பை கொடுக்க வேண்டும்: உத்தரகாண்டில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

Published On 2021-11-21 08:23 GMT   |   Update On 2021-11-21 08:23 GMT
டெல்லியில் தொடர்ந்து 2-வது முறையாக அமோக வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, தற்போது உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலை குறி வைத்துள்ளது.
ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேயிடம் இருந்து பிரிந்து, ஆம் ஆத்மி கட்சியை தொடங்கியவர் கெஜ்ரிவால். இவரது தலைமையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை பிடித்தது. மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இதனால் 2020 சட்டசபை தேர்தலிலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அப்போது, நான் உங்களுக்காக பணி செய்யவில்லை என்றால், எனக்கு வாக்களிக்க வேண்டாம் என வெளிப்படையாக பேசி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அடுத்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. இன்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரகாண்ட் சென்றுள்ளார்.

உத்தரகாண்ட் சென்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஹரித்துவாரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது  அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

2020 சட்டசபை தேர்தலில், நான் மக்களுக்கான சேவை செய்யவில்லை என்றால், டெல்லி மக்கள் எனக்கு வாக்கு அளிக்க வேண்டாம் என்று கூறினேன். தேர்தலுக்கு முன் இதுபோன்று சொல்வதற்கு யாருக்கும் தைரியம் இல்லை. எங்களுக்கு அதுபோன்று வாய்ப்பு அளியுங்கள், அதன்பின் மற்ற கட்சிகளுக்கு வாக்களிப்பதை நிறுத்துவீர்கள் என்று இன்று உங்களிடம் கேட்கிறேன்.

நாங்கள் உத்தரகாண்ட்டில் ஆட்சி அமைக்கும்போது, டெல்லியை போன்று 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச ஆன்மீக சுற்றுப்பயணம் திட்டத்தை தொடங்கி வைப்போம். அயோத்தியாவில் இலவசமாக சாமி தரிசனம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்துவோம். அதேபோல், இஸ்லாமியர்கள் அஜ்மீர் ஷெரீப் செல்வதற்கான வாய்ப்பையும், சீக்கியர்கள் கர்தார்பூர் சகிப் செல்லும் வாய்ப்பையும் ஏற்படுத்துவோம்’’ என்றார்.

Tags:    

Similar News