ஆட்டோமொபைல்
சீன உற்பத்திக்கு அனுமதி பெற்ற டெஸ்லா
டெஸ்லா இன்க் நிறுவனம் தனது வாகனங்களை சீனாவில் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளது.
டெஸ்லா இன்க் நிறுவனம் சீனாவில் தனது வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளது. டெஸ்லா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை சீன அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதை் தொடர்ந்து டெஸ்லா நிறுவனம் தனது வாகனங்களை சீனாவில் உற்பத்தி செய்ய முடியும் என ஷாங்காய் நகரை சேர்ந்த ஆட்டோ துறை சார்ந்த நிறுவன தலைவரான யேல் ஷாங் தெரிவித்தார். டெஸ்லா நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் உற்பத்தி பணிகளை துவங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக டெஸ்லா சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஷாங்காய் அருகில் டெஸ்லா நிறுவனம் 200 கோடி டாலர்கள் செலவில் உற்பத்தி ஆலை ஒன்றை அமைத்து வருகிறது. இதுவே வெளிநாட்டில் உருவாகும் டெஸ்லாவின் முதல் ஆலை ஆகும்.
ஷாங்காய் தயாரிப்பு ஆலையில் வாரத்திற்கு 1000 மாடல்களை உற்பத்தி செய்ய டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக டெஸ்லாவின் மாடல் 3எஸ் கார்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.