செய்திகள்
கைது

பல்லடத்தில் 500 ரூபாய் பணத்தகராறில் வாலிபர் கொலை- நண்பர்கள் 2 பேர் கைது

Published On 2020-01-13 11:55 GMT   |   Update On 2020-01-13 11:55 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 500 ரூபாய் பணத்தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடமலைபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் நந்தகுமார் (வயது 24). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் எழுத்தராக இருந்தார்.

நந்தகுமாரின் நண்பர் விஜய் (22). இவர் காங்கயத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்று விடுமுறை என்பதால் விஜய் ஊருக்கு வந்திருந்தார். மற்றொருவர் சுதாகர் (20). நண்பர்களான 3 பேரும் சந்தித்து பேசினர். பின்னர் மலைமேடு என்ற பகுதிக்கு மதுபாட்டிலுடன் சென்றனர். விஜய்யும், சுதாகரும் மது குடித்தனர். நந்தகுமாருக்கு மதுப்பழக்கம் இல்லாததால் அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தார்.

நந்தகுமாரிடம் விஜய் ரூ.500 கடன் வாங்கிருந்தார். அது நீண்ட காலமாக திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்தான பேச்சு எழுந்தது. இதனால் விஜய்க்கும், நந்தகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரூ.500 திருப்பி தரும்படி நந்தகுமார் கேட்டதாக தெரிகிறது. இதனால் வாக்குவாதம் கைகலப்பானது.

இதில் ஆத்திரமடைந்த விஜய் நண்பர் நந்தகுமாரை ஆவேசமாக தள்ளி விட்டார். இதில் நிலைதடுமாறி அங்கிருந்த பாறாங்கல்லில் நந்தகுமார் விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை எழுப்பி பார்த்தனர். ஆனால் அவர் மயங்கி விட்டார். இதனால் பயந்துபோன நண்பர்கள் ஓட்டம் பிடித்தனர். வெளியே சென்று நந்தகுமாரின் பெற்றோருக்கு போன் மூலம் நடந்தவற்றை கூறினர்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் காருடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்த நந்தகுமாரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து நந்தகுமாரின் பெற்றோர் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் மற்றும் சுதாகர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News