உள்ளூர் செய்திகள்
சித்திர குப்தர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
நாடி வரும் பக்தருக்கு வேண்டியது கிட்டுவதால் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் உள்ள ஸ்ரீசித்திர குப்தர் கோவில் பிரசித்தி பெற்றது. தமிழகத்திலேயே காஞ்சி புரத்துக்கு அடுத்தபடியாக திருப்பூர் சின்னாண்டி பாளையத்தில் சித்திரகுப்தர் அருள் பாலிக்கிறார்.
இங்கு சித்ரா பவுர்ணமி நாளில் விழா எடுத்து கொண்டாடுகின்றனர். நாடி வரும் பக்தருக்கு வேண்டியது கிட்டுவதால் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளாக வழிபடப்படும் சித்திரகுப்தர் கோவிலில் 90ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா இன்று நடைபெற்றது.
இதையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு, மங்கள இசையுடன் சித்திரகுப்தர் உற்சவர் திருவீதியுலா, பால்குடம் ஊர்வலம், அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை 5 மணிக்கு, ஸ்ரீகணபதி ஹோமம், சித்திரகுப்தர் சிறப்பு பூஜை, யாகபூஜை, பூர்ணாஹூதி வழிபாடுகள் நடந்தது.
காலை 10:30 மணிக்கு சித்திரகுப்தருக்கு 16 வகையான திரவியங்களால், அபிஷேகம் மற்றும் புனித கலசநீர் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. காலை 11:40 மணிக்கு கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமி அருளாசி வழங்கினார். தொடர்ந்து 12மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சித்திரை மாதம் பிறந்தவர்கள், ஸ்ரீசித்திர குப்தர் கோவிலில், பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். சித்திர குப்தரை வழிபட்டால், கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இதையடுத்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் பொங்கலிட்டு வழிபட்டனர்.
கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக, சித்ரா பவுர்ணமி விழா எளிமையாக நடந்தது. இந்தாண்டு கோலாகலமாக நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சித்திர குப்தர் ஆலய விழாக்குழு, மாதபவுர்ணமி பூஜை குழுவினர் செய்திருந்தனர்.