செய்திகள்
தமிழக சட்டசபை

தமிழக சட்டசபை ஜனவரி 2-வது வாரம் கூடுகிறது- கவர்னர் உரையாற்றுகிறார்

Published On 2020-12-26 21:13 GMT   |   Update On 2020-12-26 21:13 GMT
பரபரப்பான அரசியல் சூழலில் ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் தமிழக சட்டசபை கூடுகிறது. முதல் கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.
சென்னை:

ஒவ்வொரு ஆண்டும் சட்டசபை கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கும். அப்போது, அரசுத் திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பற்றி கவர்னர் தனது உரையில் குறிப்பிடுவார்.

மேலும், அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பையும் கவர்னர் வெளியிடுவார். இது வழக்கமான நிகழ்வாகும்.

தமிழக சட்டசபையின் 2021-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் வரும் ஜனவரி மாதம் கூடவுள்ளது. இந்த கூட்டத் தொடரை தொடங்குவதற்கான நாளை குறிப்பிடுவதற்கான கோப்பு, கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு தமிழக சட்டசபை செயலகம் அனுப்பியுள்ளது.

கவர்னர் உரையுடன் தொடங்கும் கூட்டத் தொடரை, ஜனவரியில் வரும் பொங்கல் விடுமுறைக்கு முன்பு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சட்டமன்ற கூட்டத் தொடர், ஜனவரி 2-வது வாரத்தில் 3 நாட்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

அடுத்த ஆண்டு மே 24-ந் தேதியுடன் சட்டசபை முடிவுக்கு வருகிறது. எனவே கவர்னர் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத் தொடரும், அதன் பின்பு நடைபெறவுள்ள இடைக்கால பட்ஜெட் தாக்கலாகும் கூட்டத் தொடரும், அதிக அறிவிப்புகளைக் கொண்டதாக இருக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பையும், முக்கியத்துவத்தையும் பெறுகின்றன.

அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை பரஸ்பரம் கூறிவரும் நிலையில் கூடும் இந்த சட்டசபைக் கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்னர் உரை தொடர்பாக விவாதிப்பதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் விரைவில் கூட்டப்பட உள்ளது.
Tags:    

Similar News