வங்கிகள் ஏ.டி.எம். கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதாக இருந்தால் ஏ.டி.எம். எந்திரங்களை தான் நாட வேண்டி இருக்கிறது. வங்கியின் கோட்பாடுகளின் படி அதே வங்கி ஏ.டி.எம்மை பயன்படுத்தினால் பணம் பிடிக்கப்படாது. ஆனால் ஒருசில முறை வங்கியில் பணம் எடுத்தாலோ வங்கியின் இருப்பை பரிசோதித்தாலோ பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதோடு மற்ற வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தால் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
வங்கி வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம்.மை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் கொரோனா தொற்று ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது. இந்த இடர்பாட்டை போக்க வங்கி வாடிக்கையாளர் மற்ற வங்கி ஏ.டி.எம்.மை பயன்படுத்தினாலும் பணம் பிடித்தம் செய்ய கூடாது என்று மத்திய அரசு, மத்திய ரிசர்வ் வங்கியிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.