பெண்கள் உலகம்
கேஸ் அடுப்பை கவனமாக கையாளும் வழிமுறைகள்

கேஸ் அடுப்பை கவனமாக கையாளும் வழிமுறைகள்

Published On 2022-03-03 03:31 GMT   |   Update On 2022-03-03 08:57 GMT
சமைப்பதற்குத் தேவையான பொருட்கள், சமையல் அறை சாதனங்கள் போன்றவற்றைத் தவிர, சில அத்தியாவசியமான பொருட்களும் சமையல் அறையில் இருப்பது அவசியம்.
கேஸ் அடுப்புகள் பெரும்பாலான சமையல் அறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. உபயோகப்படுத்துவது எளிதானது, விரைவாக சமைக்க முடியும் என பல நன்மைகள் இதில் இருக்கின்றன. அதேசமயம், கேஸ் அடுப்பை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமானது. நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் விபத்துகள் நேரும் வாய்ப்புகள் உள்ளன. கேஸ் அடுப்பை கையாளும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

1. அடுப்பின் நெருப்பில் கவனம்:

கேஸ் அடுப்பின் தீயை அதிகம், மிதமானது, குறைவானது என நமது தேவைக்கேற்ப வைத்து கொள்ளலாம். சமைக்கும்போது, தேவை ஏற்பட்டால் தவிர, மற்ற நேரங்களில் குறைவான தீயில் சமைப்பதையே பின்பற்றுங்கள். அடுப்பை ‘ஆன்’ செய்துவிட்டு, பர்னரை உடனே பற்ற வைக்க வேண்டும். ஒருவேளை மறந்து விட்டால் உடனே அதை அணைத்து விட்டு, சிறிது நேரம் கழித்து ஆன் செய்து பற்ற வைப்பது பாதுகாப்பானது.

2. சுத்தம் முக்கியமானது:

சமைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு அடுப்பையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதும் முக்கியமானது. தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒரு முறையோ அடுப்பை சுத்தம் செய்வதற்கு மறவாதீர்கள். அடுப்பின் மீது எண்ணெய் கறை இருந்தால், எலுமிச்சம்பழச்சாறு, பேக்கிங் சோடா கொண்டு சுத்தம் செய்யுங்கள். இல்லையெனில் சுத்தம் செய்வதற்காகவே சந்தைகளில் கிடைக்கும் பிரத்யேகமான திரவங்களைப் பயன்படுத்தலாம்.

3. கவனம் முக்கியம்:

கேஸ் அடுப்பில் சமையல் செய்யும்போது கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போது தவிர்க்க முடியாத காரணங்களால், அங்கிருந்து நகர்வதற்கு நேரிட்டால், அடுப்பை அணைத்துவிட்டோ அல்லது குறைவான தீயில் வைத்துவிட்டோ செல்லலாம். எண்ணெய், தண்ணீர் உபயோகிக்கும்போதும் கவனமாக இருங்கள். அடுப்பைச் சுற்றி எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வைப்பதை தவிர்க்கவும். குளிர்சாதனப்பெட்டியை முடிந்த அளவிற்கு சமையல் அறையில் இருந்து வெளியே வைப்பது சிறந்தது.

4. சமையலறையின் அத்தியாவசியம்:

சமைப்பதற்குத் தேவையான பொருட்கள், சமையல் அறை சாதனங்கள் போன்றவற்றைத் தவிர, சில அத்தியாவசியமான பொருட்களும் சமையல் அறையில் இருப்பது அவசியம். தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டாலோ அல்லது தீப்பிடித்தாலோ, சத்தம் எழுப்பும் ‘ஸ்மோக் அலாரம்’ எனப்படும் கருவியை சமையல் அறையில் பொருத்துவது உதவி கரமானதாக இருக்கும். தற்போது பெரும்பாலான நவீன சமையல் அறையில் இது பொருத்தப்படுகிறது.

அடுத்ததாக சமையல் அறையில் அவசியமாக இருக்க வேண்டியது ‘சிம்னி’. அடுப்பிற்கு ஏற்றவாறு சரியான சிம்னியை தேர்ந்தெடுக்க வேண்டும். இது புகை வெளியே போவதற்கு மட்டுமல்லாமல், சமைக்கும்போது வெளியாகும் எண்ணெய் பிசுக்கு சுவரில் படிவதையும் தடுக்கும்.
Tags:    

Similar News