உள்ளூர் செய்திகள்
தேசபக்தி பற்றி பேச பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை- காங்கிரஸ் கண்டனம்
தேசபக்தி பற்றி பேச பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, இந்திய தேசிய காங்கிரசின் அகில இந்தியத் தலைவராக 2 முறை பதவி வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அஹிம்சை வழியில் இந்திய விடுதலை போராட்டத்தை நடத்த வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் கொள்கை.
ஆயுதமேந்தினால் தான் ஆங்கிலேயரை விரட்ட முடியும் என்று காங்கிரசை விட்டு விலகி, படை திரட்டி இந்திய விடுதலைக்காக, பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடியவர் நேதாஜி.
இவரது தலைமையிலான இந்திய தேசிய ராணுவம், இந்தியாவுக்குள் வந்தபோது தன் தொண்டர்களை அனுப்பி நேதாஜியை எதிர்த்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ். தேச துரோக தொண்டர்படை என்பது வரலாறு. இப்படிப்பட்ட தேச துரோக கும்பலின் வழிவந்த பா.ஜனதாவுக்கு, தேசபக்தியை பற்றி பேசுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை.
சுதந்திர போராட்ட காலத்தில் விடுதலைக்காக போராடிய தலைவர்களே இல்லாததால் காங்கிரஸ் தலைவர்களான வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை முன்னிறுத்தி காந்தி, நேரு போன்ற தலைவர்களை இழிவுபடுத்தி பேசிவருகிறார்கள். மேலும் இந்திய சுதந்திர சரித்திரத்தை மாற்றி மத்திய பா.ஜனதாவினர் எழுத திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு ஏ.வி.சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.