செய்திகள்
கண்காணிப்பு பணியில் போலீசார்

தமிழகத்தில் முதல் நாள் இரவு நேர ஊரடங்கு நிறைவு

Published On 2021-04-20 21:09 GMT   |   Update On 2021-04-20 23:55 GMT
தமிழகம் முழுவதும் நேற்று இரவு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.
சென்னை:

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். இந்த நேரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பஸ் போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ தேவைகளுக்கு, விமான நிலையம், ரெயில் நிலையம் செல்வதற்கும் வாடகை கார், ஆட்டோ, தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் இயங்கவும், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அடையாள அட்டை அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் அனுமதி கடிதத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.

சென்னையைப் பொறுத்தவரை 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்படும் என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். அதன்படி சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இரவு ஊரடங்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடைகள் இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டன. போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊரடங்கை மீறி வெளியில் நடமாடுவோரை எச்சரித்து காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கின் முதல் நாள் இன்று காலை 4 மணியோடு நிறைவு பெற்றது. அதிகாலை 4 மணி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. குறிப்பாக, வெளி மாவட்டங்களுக்கான தொலைதூர பேருந்து சேவைகளில் தொடங்கின.

மேலும் பால், செய்தித்தாள் விநியோகம் உள்ளிட்ட பணிகளும் நடைபெறத் துவங்கியுள்ளன. இந்த இரவு நேர ஊரடங்கானது இன்று இரவு 10 மணிக்கு மீண்டும் அமலுக்கு வருகிறது.
Tags:    

Similar News