கோவில்கள்
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் திருக்கோவில்

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் திருக்கோவில்

Published On 2022-03-26 05:43 GMT   |   Update On 2022-03-26 05:43 GMT
மாமலையாவது திருநீர்மலையே என்று திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற பெருமாள் திருக்கோவில் இது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
சென்னை பல்லாவரதிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் மேற்கே உள்ளது. மாமலையாவது திருநீர்மலையே என்று திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற பெருமாள் திருக்கோவில் இது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.

தல வரலாறு: ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம் நோக்கி இவ்வழியே சென்றனர். அவர்களுக்கு பெருமாளின் சயனக்கோலம் கண்களை விட்டு அகலவே இல்லை. மீண்டும் ஒருமுறை அந்த தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினர். எனவே, இத்தலத்தில் தங்களுக்கு அந்த திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என உருக்கமாக பெருமாளை வேண்டினர். அப்போது சுவாமி “போக சயனத்தில்” அரங்கநாதராக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்தார். இவரே இங்கு மலைக்கோவில் மூர்த்தியாக அருளுகிறார். அருகில் பிருகு, மார்க்கண்டேயர் இருவரும் இருக்கின்றனர்.

இத்தலத்துள்ள பெருமாளைத் தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்தார். கோவில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார்.

தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் அரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகளந்த பெருமாள் என நான்கு கோலங்களையும் காட்டியருளினார். இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோவிலிலும், அரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோவிலிலும் அருள்கின்றனர்.

பாரதப்போர் முடிஞ்சு ஏகப்பட்ட உயிர்களை ‘மேலே’ அனுப்பிய பாவம் போக்க, அர்ஜுனன் தவம் செய்ய வந்த இடம் இது. வரும்போதும் காண்டீபத்தைத் தூக்கி வந்துருப்பான் போல! காண்டீபன் வந்த அடையாளமா இதுக்கு காண்டீப வனம் என்ற பெயர் வந்துருக்கு. இங்கே இருக்கும் மலைதான் தோதாத்ரி. தோதா + அத்ரி. இந்த தோதா என்பது தோயா என்பதன் மரூவு. தோயா என்றால் தண்ணீர். அத்ரி என்றால் மலை. தண்ணீர் சூழ்ந்த மலை(ப்பகுதி). நீர்மலை!

மூன்று யுகங்களில் தேவர்களும் ரிஷிகளும் செய்த யாகங்களால் அக்னிபகவானுக்கு ஆஹுதி கூடிப்போய் வயிறு மந்தமாகிப் போனது. பெருமாளிடம் போய் முறையிட்டார். அவர் காண்டீபவனத்தில் போய் பச்சிலை மூலிகைகள் எடுத்து சாப்பிட்டால் வயிறு சரியாகுமென்று கூறி அனுப்பினார். சீக்கிரம் உடம்பு குணமாக வேண்டுமே என்று ஒரு இலைவிடாமல் பிடுங்கித் தின்றார் அக்னி பகவான்.

இதனால் அந்த இடம் பொட்டல் காடானது. வெப்பாலை மரங்கள் மட்டுமே மீதம் இருந்தது. இதுதான் இங்கே ஸ்தல விருட்சமும் கூட. சளி காய்ச்சலுக்கு நல்ல மருந்து இது! மரங்கள் இல்லாததால் வனத்தில் உஷ்ணம் தகிக்க ஆரம்பித்தது. அங்கே தவமிருந்த ரிஷி முனிவர்களால் தாங்க முடியவில்லை. அவர்களும் நாராயணனிடத்தில் சென்று முறையீடு செய்தார்கம்ள். பெருமாள் வருண பகவானை அழைத்து அங்கே மழை பொழியச் சொன்னார். வருண பகவான் மழையை பொழிந்து தள்ளினார். மலையே மூழ்கும் அளவுக்கு மழை!

கோவில் அமைப்பு:

காண்டவ வனத்தில் தோயாத்ரி மலைவாசல்னு அலங்கார நுழைவு வாசல் உள்ளது. நல்ல அகலமான படிக்கட்டுகள், ஒரே சீரான உயரமுடைய 200 படிகள் உள்ளன. பாதி தூரத்தில் வலப்பக்கம் பிரியும் இடத்தில் நான்கு படி இறங்கி எட்டிப்பார்த்தால் சிறியதாக ஆஞ்சநேயர் சந்நிதி ஒன்று உள்ளது.

கோவில் முகப்பில் மூன்று நிலைக் கோபுரத்தின் முன் நான்கு தூண் கொண்ட மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி மற்றும் 'கல்கி’ சதாசிவம் தம்பதியர் கட்டிய மண்டபம். அவர்களின் திருமணம் இந்தக் கோவிலில் தான் நடந்தது.

உள்ளே நுழைந்தால் வெளிப்பிரகாரத்தில் இடதுபக்கம் ஆதிசேஷனுக்குத் தனிச்சந்நிதி உள்ளது. வலதுபக்கம் கொடிமரம் கடந்து ஒரு பத்துப் படிக்கட்டுகள் ஏறிப்போனால் படியின் முடிவில் பெரியதிருவடி சிறியதாக நிற்கும் சந்நிதி உள்ளது. அவருக்கு நேர் எதிரே கருவறையில் ரங்கநாதர் தெற்கு நோக்கி பள்ளிகொண்டுள்ளார். கருவறைப் படிக்கட்டின் இரண்டு பக்கமும் பாவை விளக்கேந்தும் பழங்காலப் பெண்டிர் சிலைகள் உள்ளன.

பெருமாள் இங்கே சுயம்புவாக தோன்றியார். இது எட்டு சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்றாகும். மற்ற ஏழு சுயம்பு க்ஷேத்ரங்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, ஸாளக்ராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், பத்ரி. சுயம்பு மூர்த்தி என்பதால் இங்கே மூலவருக்கு அபிஷேகம் இல்லை. கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் மட்டும் தைலக்காப்பு உண்டு. சாம்பிராணித் தைலம் மட்டும் பூசப்படுகிறது.

தனிச்சந்நிதியில் தாயார் ரங்கநாயகி உள்ளார். உட்பிரகாரத்தில் பால நரசிம்மர் சந்நிதி உள்ளது. இவரைச் சாந்த நரசிம்மர் என்றும் சொல்கிறார்கள். ஹிரண்யவதம் முடிந்ததும் கோபம் அடங்காமல் சிலிர்த்த உடலோடு நின்ற சிம்ஹத்தைக் கண்டு ப்ரஹலாதனுக்கு உள்ளூர நடுக்கம் ஏற்பட்டது. பாலகன் முகத்தில் பயத்தைப் பார்த்ததும் 'ஐயோ! குழந்தையைப் பயப்பட வச்சுட்டேனே’ என்று இரக்கம் தோன்ற, அவனுக்குச் சமமாக, அவனுக்கேற்ற உருவத்தில் தானும் குழந்தையாக மாறி இரண்டு கைகளுடன் இங்கே வீற்றிருக்கிறார். இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரைத் தரிசிக்கலாம்.

கிழக்கே உலகளந்தப் பெருமாள் சந்நிதி உள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவரை ஒட்டி த்ரிவிக்ரமன் உள்ளார். மகாபலியின் தலையில் மூன்றாவது அடி வைத்தவர். வைகாசி மாதம் திருவோண நக்ஷத்திர தினத்தில் இவருக்குத் தனி உற்சவம் நடத்தப்படுகிறது.

இக்கோவிலில் மூலவர் அரங்கநாதர் மலைக்கோவிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோவிலிலும் காட்சி தருகின்றனர். சுயம்புவுக்கு அபிஷேகம் இல்லாததால் அபிஷேகம், திருமஞ்சனமெல்லாம் உற்சவருக்குத்தான். கூடவே ஸ்ரீதேவி, பூதேவியர். ஆண்டாளம்மாவும் கூடவே இருப்பது விசேஷம். சித்திரை பிரம்மோத்சவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோவிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

கீழே உள்ள கோவிலில் நீர்வண்ணப் பெருமாள் சந்நிதிக்கு முன் அழகான அஞ்சுநிலைக் கோபுரத்துடன் கூடிய முன்வாசல் உள்ளது.

கோவில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் இராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகித் தனியே உள்ளது.

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

சென்னை தாம்பரத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருநீர்மலை உள்ளது. பல்லாவரம் சென்று, அங்கிருந்து திருநீர்மலை வழியாக செல்லும் பஸ்களில் 5 கி.மீ., சென்றால் இக்கோவிலை அடையலாம்.

முகவரி

அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோவில்,
திருநீர்மலை - 600 044.
காஞ்சிபுரம் மாவட்டம்.
தொலைபேசி: +91- 44-22385484, 9840595374, 9444020820
Tags:    

Similar News