உள்ளூர் செய்திகள்
சாலையோர மரத்தில் மோதி உருக்குலைந்த கார்.

சாலையோர மரத்தில் கார் மோதியதில் ஓய்வுபெற்ற மின் ஊழியர் பலி

Published On 2022-01-17 03:32 GMT   |   Update On 2022-01-17 03:32 GMT
சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற மின் ஊழியர் உயிரிழந்தார். சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிர்தப்பினர்.
காரைக்கால்:

திருக்கனூரை அடுத்த காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜமூர்த்தி (வயது 70). ஓய்வுபெற்ற மின் ஊழியர். இவர் தனது குடும்பத்தினருடன் சம்பவத்தன்று காலை திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.

கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மதியம் 1 மணியளவில் மீண்டும் புதுச்சேரி புறப்பட்டனர். காரை ராஜமூர்த்தியின் மகன் முருகசாமி (35) ஓட்டினார். காரைக்கால் எல்லையான பூவம் ஆர்.டி.ஓ. சோதனை சாவடி அருகே சென்றபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ராஜமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் காரில் பயணம் செய்த ராஜமூர்த்தி மனைவி பச்சையம்மாள் (57), மகன் முருகசாமி (35), முருகசாமியின் மனைவி சுகன்யா (25), குழந்தைகள் விசுவநாதன் (12), சுபத்திரா (10), விஜயபாஸ்கரன் (5), சர்வேஸ்வரன் (4) ஆகிய 7 பேர் லேசான காயத்துடன் தப்பினர்.

படுகாயமடைந்த ராஜமூர்த்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜமூர்த்தி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News